மன விரக்தியால் இளம் யுவதி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

 

 

மனவிரக்தியடைந்த இளம் யுவதி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் டானுகா (வயது 23) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவரது தாயார் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்துள்ளார். தந்தை இரண்டாவது திருமணம் செய்த நிலையில் சித்தியுடனே இவர் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 6ஆம் மாதம் அவரது மாமா உயிரிழந்துள்ளார்.  அவரது 90வது நாள் சடங்கிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து மனவிரக்தியுடன் காணப்பட்ட யுவதி, இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.