கருவில் குழந்தை ஆணா பெண்ணா: கரு கலைப்பு செய்யும் கும்பல்
இந்தியாவில் தருமபுரி மாவட்டத்தில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து அதனை கருக்கலைப்பு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த இடைத்தரகர்கள் உட்பட்ட 5 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே செம்மன்குழிமேடு என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக இடைத்தரகர் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பரிசோதனையில் கண்டறிந்து, பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைப்பெற்று வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு இரகசிய தகவல் கிடைத்து.
அதன் அடிப்படையில், மருத்துவர்கள் பாலசுப்ரமணியம், பாலாஜி அடங்கிய மருத்துவ குழுவினர் செம்மன்குழிமேடு கிராமத்தில் உள்ள சுபாஷ் (வயது – 28) என்பவரின் வீட்டில் தீடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தருமபுரி அழகாபுரியைச் சேர்ந்த கற்பகம் (வயது – 38) என்ற பயிற்சி செவிலியர் சட்ட விரோதமாக 7 கர்ப்பிணி பெண்களுக்கு ஆணா, பெண்ணா என்ற பாலின பரிசோதனை மேற்கொண்ட போது கையும் களவுமாக பிடிபட்டார்.
இதற்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் விஜயகுமார் (வயது – 35) தருமபுரி ஆசிரியர் காலணியை சேர்ந்த இடைத்தரகர் சிலம்பரசன் (வயது – 31) நல்லம்பள்ளி சேர்ந்தஆட்டோ ஓட்டுநர் செல்வராஜ் (வயது – 35) வீட்டின் உரிமையாளர் சுபாஷ் (வயது – 28) ஆகிய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், 2 சொகுசு கார் 1 ஆட்டோ உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.