
இரண்டு குழந்தைகளின் தாய் கூட்டுபாலியல் துஷ்பிரயோகம் : சிறுவன் உட்பட 5 பேர் கைது
இந்தியா-தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தில் கணவனை இழந்த பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை அருகே செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த 30 வயது பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்துள்ள காளவாசல் பகுதியில் செங்கல் சூளைகள் இயங்கி வருகிறது.
அங்கு வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில், அங்கு பணியாற்றி வந்த 30 வயது மதிக்கத்தக்க கணவனை இழந்த பெண் இரண்டு குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த பெண் தூங்கி கொண்டிருந்த போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் வாயை பொத்தி சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி மாறி மாறி அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.
இதனையடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்தப்பெண் உடனே மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.
