
மண்முனைப்பற்றில் புதிய வீடுகள் அமைப்பவர்களுக்கு தென்னை மரங்கள் வழங்கி வைப்பு
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேசத்தில் புதிய வீடுகள் அமைப்பவர்களுக்கு தென்னை மரங்கள் வழங்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச சபை கட்டிடத்தில் நேற்று புதன் கிழமை இடம்பெற்றது.
ஆரையம்பதி பிரதேச சபை எல்லைக்குள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை திட்டத்தின் கீழ் புதிய வீடுகளை கட்டுபவர்கள் மற்றும் புதிதாக வீடு கட்டுவதற்கென அனுமதி பெற்றவர்களுக்கு தென்னை மரங்கள் மண்முனைப் பற்று பிரதேச சபை செயலாளர் ஜே. சர்வேஸ்வரன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.
உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் எனும் அரசின் வேலைத்திட்டத்தின் கீழ் தென்னை மரங்கள் தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் சுமார் 136 தென்னை மரங்கள் 68 பயனாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டன. இதேவேளை மண்முனைப் பற்று பிரதேச சபை உத்தியோகத்தர்களும் தென்னை மரங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் திருமதி. ரவீந்திரன், ஆரையம்பதி பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் றம்லத் ஹுசைன், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், தென்னை அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




