மீற்றர் வட்டி கொடுமையால் இளம் குடும்பப் பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

-யாழ் நிருபர்-

யாழ் ஓட்டுமடத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் பெற்று கடனில் சிக்கிய இளம் குடும்பப் பெண் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் திங்கட்கிழமை தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த ஜெயராசா அருள்பாலினி (வயது – 34) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

குறித்த பெண் மீற்றர் வட்டிக்கு பணத்தினை பெற்றுள்ளார். இந்நிலையில் மீற்றர் வட்டியினாது அதிகரித்தபடியால், வட்டிக்கு பணம் கொடுத்த தரப்பினரால் வீடு, லொறி, வாகனம், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் மிகுதி வட்டிப்பணம் செலுத்தாததன் காரணமாக வட்டிக்கு பணத்தினை கொடுத்தவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தன்னால் இனி உயிர்வாழ முடியாது என்றும் உயிரை மாய்க்கப் போவதாகவும் கணவனிடம் கூறியுள்ளார். அதற்கு கணவன், பத்து மாதத்தில் கைக் குழந்தை உள்ளது எனவே இவ்வாறு தவறான முடிவு எடுக்க வேண்டாம் என கூறிவிட்டு கோவிலுக்கு சென்று நேற்று பி.ப வீடு திரும்பியவேளை வீடானது பூட்டப்பட்டிருந்தது. கதவினை திறந்து உள்ளே சென்று பார்த்தவேளை குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தூக்கில் தொங்கும் தாயாரது கால்களை பிடித்தவாறு 10 மாதங்களே நிரம்பிய குழந்தை அழுதவாறு காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலமானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.