
மனைவிக்கு ஆண் குழந்தை : தந்தை கைது
மொனராகலையில் தன்னுடைய மனைவி, ஆண் குழந்தையை பிரசவித்ததை அடுத்து, அக்குழந்தையின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை, கலபெத்த, அம்பலாந்த பகுதியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி ஒருவர் மொனராகலை பொது வைத்தியசாலையில் கடந்த 31 ஆம் திகதி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்ததை தொடர்ந்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து சிறுமியின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சிறுமி மொனராகலை அலியாவத்தை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒன்பதாம் தரம் வரை கல்வி கற்று பின்னர் தனது தாயுடன் கூலி வேலைக்குச் சென்றுள்ளார். இவர் அம்பலாந்த பிரதேசத்தில் கரும்பு வெட்டச் சென்ற போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் பெரியவர்களின் சம்மதத்தின் பேரில், மொனராகலை பிரதேசத்தில் உள்ள திருமணப் பதிவாளர் ஒருவரால், சிறுமிக்கு 19 வயது எனக் கூறி சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.திருமணமானபோது அவளுக்கு 14 வயது 07 நாட்கள் என அறியமுடிகின்றது.
பின்னர் இருவரும் அம்பலாந்த பகுதியில் உள்ள இளைஞரின் வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நிலையில் கடந்த மாதம் 31ஆம் திகதி மொனராகலை பொது வைத்தியசாலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய கணவரை கைது செய்து விசாரணைகளை மொனராகலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
