
சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம்
– ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
சித்தாண்டி சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் மகோற்சவத்தின் பிரணவ தீர்த்தோற்சவம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.தீர்த்த உற்சவத்திற்காக சுண்ணம் இடித்தல் பூஜை நிகழ்வு ஆலயத்தில் சிவாச்சாரியார்களின் தலைமையில் நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் வேத பாராயணம் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் ஆனந்த காவடி புடை சூழ அரோகரா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிரணவ தீர்த்தோற்சவத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
மகோற்சவகொடி ஏற்றம் நாகபூசணி அம்பாள் தேவஸ்தானத்தின் சிவாகம கலாநிதி சிவஸ்ரீ க. கைலாச வாமதேவகுருக்கள் மற்றும் கைலாச பானு தலைமையில் சென்ற 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைஆரம்பமாகி 15 நாட்கள் திருவிழா நடைபெற்றது.
மயில்கட்டு எனும் திருமண திருவிழா 27, 28, 29 ஆகிய மூன்றுதினங்களிலும் நடைபெற்றது. நேர்த்திக்கடன் தீர்ப்பதற்காக நூற்றுக்கணக்கில் பொங்கல் பானைகளும் படைக்கப்பட்டது.அரோகரா கோஷம் முழங்கஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றலுடன் தீர்த்தோற்சவம் நிறைவுபெற்றது.






