
இந்தியா மதுரையில் தரித்துநின்ற புகையிரத பெட்டியில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலி
இந்தியாவின், மதுரை புகையிரத நிலையத்திற்கு அருகே சாமி தரிசனத்திற்காக பயணம் செய்த யாத்திரிகர்கள் பயணித்த புகையிரத பெட்டி ஒன்றில் இன்று சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அதில் 3 பெண்கள், 4 ஆண்கள் மற்றும் ஒருவர் அடையாளம் தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்த மேலும் 8 பேர், புகையிரத மருத்துவமனை மற்றும் அரச ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் 6 ஆண்கள், 2 பெண்கள் உள்ளடங்குகின்றனர்.
புகையிரதத்தில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என தென்னக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
குறித்த புகையிரதத்தில் பயணித்த பெண் ஒருவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், சில பயணிகள் சிலிண்டரை பற்ற வைத்து தேநீர் ஊற்ற முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மிகப் பயணமாக 60 இற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் அடங்கிய குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனிதத்தலங்களுக்கு சென்று, இறுதியாக நேற்று வெள்ளிக்கிழமை நாகர்கோவிலில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை 3.45 மணியளவில் புணலூரில் இருந்துவந்த புகையிரதம் மூலம் அவர்கள் மதுரை வந்துள்ளனர். அவர்கள் வந்த இரண்டு புகையிரத பெட்டிகள் தனியாகப் பிரிக்கப்பட்ட மதுரை ரயில்வே சந்திப்பில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மற்றுமொரு புகையிரதம் மூலம் நாளை அவர்கள் சென்னை செல்லவிருந்தனர்.


