மௌலவி முபாறக் அப்துல் மஜீத்தின் மகன் மீது தாக்குதல்

 

-அம்பாறை நிருபர்-

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்தின் மகனும் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் செயலாளருமான ஷாஹிட் முபாறக் (வயது-28) என்பவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் வைத்து கடந்த திங்கட்கிழமை இரவு தனது வாகனத்தில் மனைவியுடன் சென்று கொண்டிருந்த வேளை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் செயலாளர் ஷாஹிட் முபாறக் மீது இனந்தெரியாத இருவர் தாக்குதல் மேற்கொண்டு தலைமறைவாகியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் செயலாளர் தற்போது கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்துடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திலும் குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளானவர் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் செயலாளர் என்பதும் அண்மைக்காலமாக கட்சி நடவடிக்கையில் தீவிரமாக செயற்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மேலதிக கல்முனை தலைமையக பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.