புலம்பெயர் சமுதாயம் உண்மையான நிலையை புரிந்து தங்களுடைய ஆதரவுகளை வழங்க வேண்டும்

-திருகோணமலை நிருபர்-

புலம்பெயர் சமுதாயம் உண்மையான நிலையை புரிந்து கொண்டு தங்களுடைய ஆதரவுகளை வழங்க வேண்டும் என  ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் அமைப்பாளர்   அகத்தியர் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈழத் திருநாட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அரசியல் சூழ்நிலைகள், சமயத்தினுடைய நிலைமைகள் பற்றி யாவரும் அறிந்திருப்பீர்கள்.

குறிப்பாக திருகோணமலை மண்ணில் கடந்த சில நாட்களாக நடந்தேறிய விடயங்களை யாவரும் அறிந்திருப்பீர்கள். இப்படியான செயற்பாடுகள் இன நல்லிணக்கம் என பேசிக்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை அரங்கேற விடுவது பொருத்தமற்ற செயல் ஒற்றுமை என்பது வாயளவில் சொல்லிக் கொண்டிருக்கின்ற விடயம் அல்ல. செயல் முறையில் உளரீதியாக காட்டப்பட வேண்டிய விடயங்கள்.

ஆனால் நடைமுறையில் பெரும்பான்மையிருடைய செயல்பாடுகள் அதற்கு மாறுதலாக காணப்படுகின்றது.

தமிழர்களை வெட்டி களனி கங்கையில் தலைகளை எறிவேன் என்ற வசனம் பண்பாடான ஒரு அரசியல்வாதி பேசக்கூடிய ஒரு வசனம் அல்ல.

பாராளுமன்ற அரங்கிலே மக்கள் பிரதிநிதி பேசுவது,  சமய பிரதிநிதிகள் இவ்வாறான விடயங்களை கையாளுவது மானுட பண்புக்கு பொருத்தமானதாக தெரியவில்லை எனவும் அகத்தியர் அடிகளார் குறிப்பிட்டார்.

தமிழர்கள் எல்லோரும் பாகுபாடு இன்றி ஒன்றுபட வேண்டும் என்பதே என்னுடைய அவா!

எங்களுடைய இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழர்கள் எங்களுடைய நிலைமைகளை சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. சிந்தித்து செயல்படுவதற்காக அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழக பெரியோர்கள், மாணவர்கள் சமூகத்தை நேசிக்கின்ற அக்கறை உள்ள புத்தி ஜீவிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நாங்கள் என்ன செய்யலாம் எப்படி எங்களுக்கான இருப்பை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதை சிந்தித்து செயல்படுவதற்கு நாங்கள் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் அமைப்பாளர் அகத்தியர் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.