
சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு சீல் வைப்பு!
-யாழ் நிருபர்-
யாழ். மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் மாதாந்தம் குழுவாக உணவகங்கள், பலசரக்கு கடைகள் என்பன கிரமமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கடந்த புதன்கிழமை அன்று பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் யாழ். நகர் பகுதியில் உணவகங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள உணவகங்கள் இரண்டு, பல்வேறு வகையான சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கியமை பொது சுகாதார பரிசோதகர்களினால் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் 02 உணவகங்களுக்கும் எதிராக ‘B’ அறிக்கையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்குகளை விசாரணை செய்த நீதவான் உணவகங்களை மறு அறிவித்தல் வரை சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு உத்தரவிட்டதுடன், உணவக உரிமையாளர்களை தலா ஒரு இலட்சம் சரீரப்பிணையில் விடுவித்தார்.
அத்துடன் வழக்கு விசாரணையினை எதிர்வரும் 28.06.2023 ற்கு ஒத்தி வைத்தார்.
இதனை தொடர்ந்து யாழ்.நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் குறித்த இரண்டு உணவகங்களும் சீல் வைத்து மூடப்பட்டன.



