முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்கா கறுப்புப் பட்டியலில்

இலங்கையின் வடமேல் மாகாண ஆளுநரும், முன்னாள் கடற்படை தளபதியுமான வசந்த கரண்ணாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைத்துகொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், அவர் மீதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அவருக்கு விசா வழங்க மறுப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணாகொட உள்ளிட்டோருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும், அவர் குறித்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்ததுடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வடமேல் மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.

கரண்ணாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ‘தீவிரமான மற்றும் நம்பகத்தன்மையுடன்’ இருப்பதாகவும், ஆளுநரோ அல்லது அவரது மனைவியோ அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார்.

‘மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கும், இலங்கையில் குற்றவாளிகளுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கும் அமெரிக்கா தமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்