தவிசாளரின் வீட்டிற்கு முன்னால் தீக்குளித்து உயிரிழந்த பெண்

-யாழ் நிருபர்-

வலி. வடக்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் சுகிர்தனின் வீட்டிற்கு முன்னால் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண், நேற்றிரவு முன்னாள் தவிசாளரின் வீட்டுக்கு முன் வந்து, தனக்குத் தானே தீ மூட்டியுள்ளார். தீ அணைக்கப்பட்டதையடுத்து கிணற்றினுள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

குறித்த பெண் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த பெண் வலி. வடக்கு பிரதேச சபையில் பணியாற்றும் உத்தியோகஸ்தர் என்பதுடன், கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகின்ற நிலையில் அவருக்கு 10 வயதில் பிள்ளை ஒன்று உள்ளது.

இந்த பெண்ணுக்கும் முன்னாள் தவிசாளருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் காணப்பட்டதாகவும், அதன் காரணமாக நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் அயலவர்களால் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், சுன்னாகம் பொலிஸார் முன்னாள் தவிசாளர் சுகிர்தனை வாக்குமூலம் பெறுவதற்காகவும், அவருடைய பாதுகாப்பு கருதியும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துள்ளனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.