90% நீர் வழங்கல் கட்டமைப்புகள் வழமைக்கு திரும்பின

அனர்த்த நிலைமையால் நீர் வழங்கல் கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 90 சதவீதமானவை தற்போது வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அனர்த்த நிலைமை காரணமாக நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான 343 நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 156 நிலையங்கள் செயலிழந்தன.

இதனால், கண்டி மாவட்டத்தின் நீர் வழங்கல் நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அவற்றைப் புனரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நீர் வழங்கல் ஊழியர்களின் அர்ப்பணிப்பு காரணமாக, சேதமடைந்த நீர் வழங்கல் அமைப்புகளில் சுமார் 90 சதவீதத்தை வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சேதமடைந்த வீடுகளைப் புனரமைப்பதற்கான பணிகள் வெகுவிரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதால் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.