மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு கிராமத்தில், இன்று திங்கட்கிழமை அதிகாலை காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்தியே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கையில், தகரத்தினால் அமைத்த வீட்டினுள் இருந்த நெல்லினை உண்பதற்காக வந்த காட்டு யானையை கண்டு பயத்தில் வெளியே ஓடிய போது யானை தாக்கியதில் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளதாக அறிய முடிகிறது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் நான்கு பிள்ளைகளின் தாயான 58 வயதுடைய வைரமுத்து மலர் என்பவராவார்.
சம்பவ இடத்திற்கு வந்த வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப் பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டு விசாணைகளை மேற்கொண்ட பின் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்துச் செல்லுமாறு பணித்துள்ளார்.
இதே வேளை மண்முனை மேற்கு பிரதேச செயலாளரின் அனுமதிக்கமைவாக பிரதேச செயலகத்தினால் யானை தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு பத்து இலட்சம் ரூபா நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படது
அதன்படி மரண சடங்கிற்கு முற்பணமாக ஒரு இலட்சம் ரூபா காசேலையினை உயிரிழந்தவரின் மகனிடம் கிராம உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர் ஆகியோர் வைத்தியசாலையில் வைத்து கையளித்தனர்.