10 ஆவது தேசிய சாரணர் ஜம்போரியை கிழக்கு மாகாண சபையோடு இணைந்து நடாத்த கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது

10 ஆவது தேசிய சாரணர் ஜம்போரியை கிழக்கு மாகாண சபையோடு இணைந்து நடாத்த கிடைத்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் ஜம்போரியை சிறப்பாக நடாத்த தேவையான ஒத்துழைப்புக்கள் உயர்ந்த மட்டத்தில் வழங்கப்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அரசாங்க அதிபர் இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஐம்போரி நடைபெறவுள்ளதுடன் கலந்து கொள்ளும் சாரண தலைவர்களுக்கு தேவையான வசதிகளை பல நிறுவனங்கள் இணைந்தும் வழங்கி வருகின்றன.

தற்போது சாரணர்கள் தமக்கான கூடாரங்களை அமைத்து வருகின்றனர். தேசிய சர்வதேச அடிப்படையில் 11500 க்கு மேற்பட்ட சாரணர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

சுகாதாரம், பாதுகாப்பு, குடிநீர் உட்பட பல வசதிவாய்ப்புக்கள் தடங்கலின்றி வழங்குவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சாரணர்களுக்கான விசேட வைத்திய வசதி பிரிவொன்றும் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாளை உத்தியோகபூர்வமாக நடைபெறும் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி கலந்து கொள்கிறார்.

சிறீ கோணேஸ்வரா இந்து கல்லூரி மைதானத்தில் அங்குரார்ப்பண நிகழ்வுகள் நடைபெறும்.நாளை முதல் ஜம்போரியை பொது மக்கள் பார்வையிட முடியும்.

ஜனாதிபதியின் வருகை மற்றும் ஐம்போரியை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.