
-நுவரெலியா நிருபர்-
கடந்த மாதம் 27 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக கொட்டி தீர்த்த மழையில் அக்கரபத்தனை – மன்ராசி ஊட்டுவள்ளி பழமையான பாலம் இடிந்து விழுந்து ஆற்றில் அடித்துச் சென்றுள்ளது.
குறித்த இரும்பு பாலத்தை பயன்படுத்தும் சுமார் ஆறு தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 3000 பேருக்கு மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இதன்படி ஊட்டுவள்ளி, வெங்கட்டன், கொடமல்லி, பச்சபங்களா, நல்லதண்ணி மற்றும் உருலேக்கர் உள்ளிட்ட ஆறு தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியவர்கள் எனப் பலரும் தமது அன்றாடத் தேவைகளுக்காக இந்தப் பாலத்தையே கடந்துதான் சென்றனர்.
பாலம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற சந்தர்ப்பத்தில் சுமார் 5 கி.மீ., சுற்றி செல்ல வேண்டும் எனவும் இதனால் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் தொழிலாளர்களும் அவதியுற்றனர்
குறிப்பாக பாடசாலை மாணவர்கள், நோயாளி்கள் மற்றும் அன்றாடத் தேவைகளுக்காக மன்ராசி, டயகம, அக்கரபத்தனை, தலவாக்கலை, லிந்துலை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பிரதான நகரங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர் .
இப்போது அவ்விடத்தில் தற்காலிகமாக இரண்டு மரங்களை குறுக்கே இட்டு துண்டாக வெட்டப்பட்ட சிறிய மரங்களை கொண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது
பாதுகாப்பு இன்றி தற்காலிகமாக அமைக்கப்பட்ட மரப்பாலத்தில் விபத்து ஒன்று ஏற்பட்டு உயிர்ச் சேதம் ஏற்படுவதற்கு முன்னர் அவ்விடத்தில் புதிதாக பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
