வெருகலம்பதி அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம்

-வாழைச்சேனை நிருபர்-

கிழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சின்னக் கதிர்காமம் என சிறப்பித்துக் கூறப்படுவதும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என முறையாக அமையப் பெற்றதுமான வெருகலம்பதி அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்த்தான வருடாந்த மஹோற்சவப் பெரு விழா நேற்று திங்கள் கிழமை திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

வேதாகம மாமணி பிரம்மஸ்ரீ சோ.ரவிச்சந்திர குருக்களின் அருள் ஆசியுடன் கொடியேற்றம் ஆரம்பமானது.

தொடர்ந்து 18 தினங்கள் உற்சவ நிகழ்வுகள் யாவும் நடைபெற்று, எதிர்வரும் 16.09.2022 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.25 மணிக்கு தீ மிதிப்பு வைபவமும் காலை 7.33 மணிக்கு புனித கங்கையில் தீர்த்தோற்ச்வமும் நடைபெற்று அன்று மாலை கொடியிறக்கம் இரவு திருவூங்சலும் பூங்காவனத் திருவிழாவும் நடைபெற்று விழாவானது இனிதே நிறைவு பெறும்.

இதேவேளை, இவ் ஆலயத்தில் விசேட திருவிழாக்கள் நடைபெறவுள்ளது.

திருவிழாக்கள் யாவும் மரபு வழி கங்காணமும் நிர்வாகமும் வெருகலம்பதி தலைமையில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ச.சிவகுமார குருக்களின் வழிகாட்டலில் மஹோற்சவ பிரதம குரு பிரம்மஸ்ரீ பா.தினேஸ்வர குருக்கள் வாமதேவ சிவச்சாரியாரால் நடாத்தப்படும்.