வயோதிப தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்

வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது செட்டிகுளம் பகுதியைசேர்ந்த பசுபதிவர்ணகுலசிங்கம் (வயது – 72) என்ற முதியவரும், அவரது மனைவியான கனகலட்சுமி (வயது – 68) என்பவருமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

செட்டிகுளம் பிரதான வீதியில் குறித்த தம்பதிகளின் மகன் வியாபார நிலையம் ஒன்றை நடாத்திவரும் நிலையில், அதற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் குறித்த தம்பதிகள் வசித்துவந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு வழமைபோல அவர்களது மகன் வியாபார நிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த தம்பதிகள் வியாபார நிலையத்திற்கு பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை வியாபார நிலையத்தை திறப்பதற்காக வருகைதந்த மகன் தனது தாயும் தந்தையும் ரத்த வெள்ளத்தில் கிடந்தமை கண்டு சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிசார், குறித்த சம்பவத்தில் 5 பவுண் பெறுமதிமிக்க தங்கநகை ஒன்றும் காணாமல்போயுள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் கொள்ளையில் ஈடுபடும் போது இந்த கொலைகள் இடம்பெற்றதா என்ற கோணத்திலும் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்