ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நடை பயணம்

-மன்னார் நிருபர்-

ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 4 ஆம் திகதி இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 23 மீனவர்களின் வழக்கு கடந்த 16ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்கள் 20 பேரை விடுதலை செய்ததுடன் அதிலிருந்த மீன்பிடி விசைப்படகின் ஓட்டுனர் இருவருக்கு ஆறு மாத கால சிறை தண்டனையும், மற்றுமொருவர் இரண்டாவது முறையாக இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதால் ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த நான்கு நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று செவ்வாய் கிழமை காலை 9 மணி அளவில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து 600 க்கும் மேற்பட்ட மீனவர்கள் அனைத்துக் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இணைந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மூன்று நாள் நடை பயணத்தை தொடங்கியுள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் தொடங்கிய நடைபயணம் திட்டக்குடி வழியாக ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தை கடந்து ராமநாதபுரம் நோக்கி செல்கிறது.

600 க்கும் மேற்பட்டோர் தொடர் நடைபயணத்தில் ஈடுபட்டு வருவதால் ராமநாதபுரம் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் தலைமையில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

நடை பயணத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் மீனவர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.