ரத்தவெள்ளத்தில் கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் சடலம் : தந்தை செய்த கொடூரசெயல்!

-அம்பாறை நிருபர்-

தந்தை ஒருவர் இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினமான இன்று வியாழக்கிழமை காலை பெரிய நீலாவணை முஸ்லீம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலம் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டது.

அத்துடன் தனது மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளை கொன்று தற்கொலையில் ஈடுபட்ட தந்தையும் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் முஹம்மது மிர்சா முகமது கலீல் (வயது-63) தற்போது காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ் (வயது-29) முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா (வயது-15) ஆகியோர் சம்பவ இடத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தவர்களாவர்.

சம்பவத்தில் உயிரிழந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இறந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.