யாழ்.மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டுக் கழகத்தின் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை மோகனதாஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
சென்ற வாரம் ஆரம்பமான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் A பிரிவில் 7 கழகங்கள் பங்குபற்றி போட்டியிட்டு இருந்தன.
இறுதி போட்டிக்கு ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை எதிர்த்து கெரடாவில் ஐக்கிய விளையாட்டுக்கழகம் பலப்பரீட்சை நடத்தியிருந்தது.
நான்கு சுற்றுக்களும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் மூன்று சுற்றுக்களில் வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.
அத்துடன் B பிரிவில் நடைபெற்ற போட்டியில் 20க்கு மேற்பட்ட அணிகள் பங்குபற்றி இறுதிப்போட்டிக்கு அச்சுவேலி கலைமகள் அணியை எதிர்த்து நாயன்மார்கட்டு பாரதி அணி பலப்பரீட்சை நடத்தியிருந்தது.
மூன்று சுற்றுக்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அச்சுவேலி கலைமகள் விளையாட்டுக்கழகம் மூன்று சுற்றுக்களில் வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
இப்போட்டியில் A பிரிவில் ஆட்டநாயகனாக இந்து இளைஞர் அணியின் வீரர் சன்சயன் மற்றும் B பிரிவில் அச்சுவேலி கலைமகள் அணியின் சன்ஜய் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இப்போட்டிக்கு பிரதம விருந்தனராக யாழ்.பல்கலைக்கழக உடற்கல்வி விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறை கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தை வழங்கியிருந்தார்.
மோகனதாஸ் விளையாட்டு கழக நிர்வாகத்தினர்கள், கழக உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள், பிரதேச மக்கள், நலன் விரும்பிகள்,கரப்பந்தாட்ட ரசிகர்கள் என அனைவருனதும் ஒத்துளைப்பில் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது சிறப்பாக நடைபெற்றது.