
ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.
சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். அடுத்து சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலமாகும். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும்.
தட்சணாயணத்தின் தொடக்கதினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது. இந் நாளில் தமிழ் மக்கள் ஆடிக்கூழ் கொழுக்கட்டை என்னும் உணவு வகைகளை விசேடமாகச் தயாரித்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தல், உற்றார் உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணல் என்பன வழக்கமாகும்.
இந்த ஆடிப்பிறப்பானது வீடுகளில் மாத்திரமன்று ஆலயங்கள், பாடசாலைகள், வேலை செய்யும் அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும், தமிழர்களின் ஏனைய பண்டிகைகளை போலவே கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் இன்று வியாழக்கிழமை சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் இந்த ஆடிப்பிறப்பு பண்டிகையானது, கல்லூரியின் முதல்வர் திருமதி.சுலபாமதி தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதன்போது ஆடிக் கூழ் தயாரித்து அதிபர், ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் என அனைவரும் குடித்து மகிழ்ந்தனர்.
