
மூதூர் அந்தோனியார் மகா வித்தியாலயத்தின் 160 வது ஆண்டு நிறைவு
-மூதூர் நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பழமையான பாடசாலைகளில் ஒன்றான மூதூர் அந்தோனியார் மகா வித்தியாலயத்தின் 160வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவணி பேரணி இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் அருட்பணி கொன்பியுசியஸ் அடிகளார் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
மூதூர் அந்தோனியார் மகா வித்தியாலய பாடசாலை நிருவாகம்,பாடசாலையின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டிலும் இவ் நடைபவணி இடம்பெற்றது.
நடைபவணி ஆரம்பமாவதுக்கு முன்னர் பாடசாலையின் 160வது நினைவு வரவேற்பு வாயில் நிகழ்வின் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இதன் பின்னர் பாடசாலை நுழைவாயிலிருந்து நடைபவணி ஆரம்பமாகி மூதூர் பிரதான வீதியூடாக பயணித்து மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
இவ் நடைபவணி நிகழ்வில் பாடசாலையின் மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் பாடசாலை கொடிகளை ஏந்தியிருந்தனர்.அத்தோடு பாடசாலையை பிரதிபலிக்கும் வகையில் பெனர்கள்,நினைவுச் சின்னங்களை ஏந்தியவாறு நடனங்கள் ஆடி நடைபவணியில் ஈடுபட்டனர்.