
மட்டக்களப்பு ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்திக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
மயிலத்தமடு மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதி வேண்டி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி மட்டக்களப்பு செங்கலடியில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
அன்றையதினம் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க, மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவ்வேளையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கவனயீரப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பேருக்கு எதிராக பொலிஸாரால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் (வழக்கு இலக்கம் 43778/PC) செய்யப்பட்டது.
குறித்த வழக்கு, இன்று புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 31 பேர்களில் ஒருவரான ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்திக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடகவியலாளர், தொடர்ச்சியாக இடம்பெற்ற வழக்குகளுக்கு முன்னிலையாகவில்லை என்றும், அவர் வெளிநாடு ஒன்றில் வசிப்பதாகவும் பொலிஸார் தரப்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், குடிவரவு குடியல்வு திணைக்களத்திற்கு குறித்த ஊடகவியலாளரின் தகவல்களை அனுப்புமாறு நீதவான் பணித்துள்ளார்.
ஏனைய 30 பேரும் ஒரு இலட்சம் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர், நீதிமன்றில் தனித்தனியாக பிணையாளிகளுடன் பதிவு செய்யுமாறு, ஒருவாரம் காலவகாசம் வழங்கப்பட்டது.
வழக்கின் 9 ஆவது தவணை, எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.