மருதமுனை பிரபல ஆண்கள் மத்ரஸாவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை

-அம்பாறை நிருபர்-

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை மதரஸா ஒன்றில் மாணவர்களை தண்டனை என்ற பெயரில் சுடும் வெயிலில் நிறுத்திய சம்பவம்  பதிவாகியுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள சூடான காலநிலையில் நீண்ட நேரம் வெளியே செல்ல வேண்டாம் என சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு போன்றவை அறிவுறுத்தல் வழங்கிய நிலையில் மருதமுனை மதரஸா மெளலவி ஒருவர் சிறு வயதை உடைய மாணவர்களுக்கு இவ்வாறான சித்திரவதை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

புனித ரமழான் மாதத்தில் நோன்பாளியாக இருக்கும் நிலையில் சிறு வயதை உடைய இம்மாணவர்களின் நிலைமை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

இச்சம்பவம் எப்போது இடம்பெற்றது என உறுதிப்படுத்த முடியாவிடினும் அண்மையில் எடுக்கப்பட்ட சம்பவமாகவே சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த வருடம் சாய்ந்த மருது பகுதியில் மதரஸா ஒன்றில் இடம்பெற்ற மாணவனின் மர்ம மரணம் இங்கு சுட்டி காட்ட தக்கது.

எனவே மதரஸாக்களின் நிலையும் அங்கு கற்பிக்கும் உலமாக்களின் நிலையும் தொடர்ந்தும் இவ்வாறு இருக்குமாக இருந்தால் நமது நாட்டில் உள்ள மதரஸாக்களின் நிலைக்கு பொறுப்பு கூறுவது யார்? இது சம்பந்தமாக மதரஸாக்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.