மதுபான போத்தல்களுடன் தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது!

-மூதூர் நிருபர்-

திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சேருநுவர நகர் பகுதியில் வைத்து மதுபான போத்தல்கள், பியர் போத்தல்களுடன் 55 வயதுடைய சந்தேக ஒருவர் சேருநுவர பொலிஸாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சீல் மதுபானம் -750 மில்லி லீற்றர் போத்தல்கள் 13, 375 மில்லி லீற்றர் போத்தல்கள் 21 , மற்றும் பியர் போத்தல் -625 மில்லி லீற்றர் -14, பியர் டின் 500 மில்லி லீற்றர் 38 உம் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் வங்கி ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றும் சேருநுவர பகுதியைச் சேர்ந்தவரென சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் வங்கியில் கடமையாற்றும் சந்தேக நபர் சட்டவிரோதமான முறையில் போயா தினத்தில் மதுபான போத்தல்களை மறைத்து வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த தனியார் வங்கியின் ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருக்கும் அறையினை சோதனைக்குட்படுத்தியபோதே சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மேற்படி மதுபான போத்தல்கள்,பியர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் நாளை செவ்வாய்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.