கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்ட போதை பொருளை, வியாபாரத்துக்காக எடுத்து சென்ற இரு இளைஞர்களை, இன்று புதன்கிழமை அதிகாலை கைது செய்துள்ளதாக, மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம்.ஜி பிரியந்த பண்டார தெரிவித்தார்.
3700 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருள் மற்றும் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 640 ரூபா பணத்துடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் கொஸ்தாப்பர் ஜெயசிங்கவுக்கு கிடைத்த தகவலையடுத்து, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித்த லீலரத்தினவின் ஆலோசனைக்கமைய, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில், பொலிஸ் கொஸ்தாப்பர் ஜெயசிங்க தலைமையில், சமரபண்டு, ரதன் ஆகிய பொலிஸ் குழுவினர், சம்பவதினமான இன்று அதிகாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பு நகர்பகுதி திருகோணமலை வீதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது, கொழும்பில் இருந்து பேருந்தில் வந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர், போதை பொருளை கொண்டு வந்து மற்றைய இளைஞரிடம் வழங்கிய பின், இருவரும் போதைப்பொருளை எடுத்துக்கொண்டு மட்டக்களப்பு நகர் பகுதிக்குள் வரும் போது, கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 23 வயதுடைய ஒருவரிடமிருந்து 3200 மில்லிக்கிராம் போதைப்பொருளும் , 23 வயதுடைய மற்றைய நபரிடமிருந்து 4500 மில்லிகிராம் ஜஸ் போதை பொருளும், பணம், 2 கையடக்க தொலைபேசிகள் ஆகியவற்றை பொலிஸார் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள், பூம்புகார் லயன்ஸ் கிளப் வீதி மற்றும் கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எனவும், அவர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
மேலதிக விசாரைணகளை முன்னெடுத்துள்ள மட்டு தலைமையக பொலிஸார், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.