மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட அளவீட்டுப்பணி

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதி அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர்.

இதன்போது குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன் நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்தனர்.

பின்னர் நீண்ட நேர காணி உரிமையாளர்களின் எதிர்ப்பினை அடுத்து காணியினை அளவீடு செய்வதற்கு தமக்கு விருப்பம் இல்லை என காணி உரிமையாளர்கள் கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கியதை அடுத்து நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

குறித்த பகுதியில் அதிகமான பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் குவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.