பொலிஸார் துரத்தி வந்த கார் விபத்து : மூவர் படுகாயம்!

பொலிஸார் துரத்தி வந்த கார் விபத்துக்குள்ளானதில், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நவாலி மூத்தநயினார் ஆலயத்திற்கு முன்பாக, நேற்று புதன்கிழமை இரவு 8.15 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மானிப்பாய் பொலிஸார் கார் ஒன்றினை துரத்தி சென்ற போது, குறித்த கார் மூத்தநயினார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள தையல் கடை மற்றும் வேறு ஒரு கடையின் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தையல் கடையில் இருந்த மூவர் படுகாயமடைந்ததுடன், அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த மூவரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரை செலுத்தி வந்த சாரதி, மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விபத்தின் போது, இரண்டு கடைகளும், மூன்று தையல் இயந்திரங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.