பிள்ளையானின் மனு மீதான விசாரணை : ஜூன் 17 பரிசீலிக்க தீர்மானம்

பிள்ளையானின் மனு மீதான விசாரணை -கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதற்கு எதிராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை ஜூன் 17 ஆம் திகதி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்மானித்துள்ளது.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மஹிந்த சமயவர்தன மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பரிசீலிக்கப்பட்டது.

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த மனுவில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் இமேஷா முத்துமாலி, பதில் பொலிஸ் தலைவர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு அமைச்சர் அநுர குமார திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.