பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கம் வழங்கும் நிவாரண நிதிகளை, எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் மக்களுக்கு வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பது தொடர்பில் இன்று
நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார் .

கலந்துரையாடலில் அமைச்சர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் 25,000 ரூபாய் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை வாங்குவதற்காக வழங்கப்படும் 50,000 ரூபாய் ஆகியவற்றை இந்த மாத இறுதிக்குள் பாதிக்கப்பட்டவர்களின் கைகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதேநேரம் வீடுகள் மற்றும் பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடுகளை வழங்கும் பணிகளைச் செயற்திறனுடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் எவரையும் கைவிடாத வகையில், தகுதியுள்ள அனைவருக்கும் வெளிப்படைத்தன்மையுடன் இழப்பீடு கிடைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்துள்ளார் .

அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து மக்களை உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த வேண்டும். இதற்கான காணி அடையாளப்படுத்தல் மற்றும் புதிய வீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, பெரும் போகச் செய்கைக்காக நீர்ப்பாசனக் கட்டமைப்புகளைப் புனரமைத்தல், விதை நெல் மற்றும் உர வசதிகளை வழங்குதல் தொடர்பில் ஜனாதிபதி கேட்டறிந்தார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட கால்நடை பண்ணையாளர்கள், சிறு வர்த்தகர்கள் மற்றும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் ஆரம்பிக்கத் தேவையான உதவிகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் 15,000 ரூபாய் உதவித்தொகையை உடனடியாக வழங்கி நிறைவு செய்யுமாறு பணிக்கப்பட்டதுடன், அனர்த்தத்தின் போது சேதமடைந்த கடவுச்சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகளை மீண்டும் வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.