பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நடைபெற்று முடிந்த 2023ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதமானால் இவ்வருடம் நடைபெறவுள்ள அனைத்துப் பரீட்சைகளும் பிற்போடப்படும் அபாயம் உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தற்போதைய கல்வி அமைப்பை சீர்குலைக்கும் ஒரு சிறிய சம்பவம் கூட பாடசாலை அமைப்பில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இவ்வாறான செயற்பாடுகளினால் பரீட்சைக்காலம் மாத்திரமன்றி பாடசாலைகளின் முழு செயற்பாடுகளும் தடைபடுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளிலிருந்து ஆசிரியர்கள் விலகியமையால் இந்தச் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இம்முறை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நாளாந்த கொடுப்பனவு தொடர்பில் நிலவும் பிரச்சினையின் அடிப்படையிலேயே இந்தச் சிக்கல் ஏற்பட்டதாகவும் எவ்வாறாயினும், கடந்த ஆண்டைப் போலவே, ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை எவ்வித பிரச்சினையும் இன்றி வழங்கப்படும் என கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.