பதுளை மாவட்டத்தில் மண்சரிவு – 4 பேர் உயிரிழப்பு

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (26) சீரற்ற வானிலை காரணமாக மாவட்டத்தில் ஆறு இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த அனர்த்தங்களில் சிக்கி இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சுமார் ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளனர் என மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் பதிவாகியுள்ளன. காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர் .

இதேநேரம் பதுளை-மஹியங்கனை வீதியின் தல்தேன, புசல்ல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.