நெற் செய்கையின் போது ஏற்படும் நோய் தாக்கம் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழி முறைகள் தொடர்பான விழிப்புணர்வு

-கிண்ணியா நிருபர்-

 

திருகோணமலை பிரதி விவசாய பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைய, உதவி விவசாய பணிப்பாளரின் தலைமையின் கீழ்,  தம்பலகமாம் விவசாய போதனாசிரியர் பிரிவில்,  புது குடியிருப்பு  கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட நெல் வயல் நிலங்களில் ஏற்பட்டுள்ள கபில நிற தாவர தத்தி, வெண் முதுகு தாவரத் தத்தி, தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை முகாமைத்துவம் செய்து அவற்றை குறைப்பதற்கான விழிப்புணர்வு இன்று வெள்ளிக்கிழமை குறித்த வயல் நிலப் பகுதியில் இடம் பெற்றது.

தற்போது ஏற்பட்டிருக்கும் தாவரதத்தியின் வெண்முதுகு கபில நிறம் போன்றன நெற்செய்கையின் போது நோய் தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது இதில் இருந்து விவசாயிகள் மீள எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் போன்றன தொடர்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டினர்.

இது தொடர்பில் உதவி விவசாய பணிப்பாளர் சீ.ஆர்.டி.துஷ்யந்தக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ,

தம்பலகாமம் பகுதியில் சுமார் 1117 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பெரும் போக விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

நாட்டின் வடகிழக்கு உட்பட பல வயல் பிரதேசங்களில் இவ் நோய் தாக்கமான கபில நிற வெண்ணிற தாவர தத்தி தாக்கம் ஏற்பட்டுள்ளது

இது அசாதாரண கால நிலை காரணமாக வேகமாக பரவி வருகிறது இதனை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கான முன்ஆயத்த முறைகளை செயன் முறை பயிற்சி ஊடாக வழங்கி வருவதுடன் ஒலிபெருக்கி மூலமான விழிப்புணர்வுகளையும் விவசாய திணைக்களம் ஊடாக செய்து வருகிறோம் என்றார்.

இவ் நோய் தாக்கத்தின் பாதிப்பினால் விவசாயிகளாக நாங்கள் நஷ்டமடைந்து வருகிறோம் கிருமி நாசினி பல முறை விசிறினாலும் அதன் தாக்கம் ஓயாத நிலையில் உள்ளது இதற்கான நிரந்தர தீர்வினை பெற்றுத் தாருங்கள் என விவசாயிகள் இதன் போது தெரிவித்தனர்.

மருந்து கலவைகளை கலந்து நோய் தாக்கத்தை இல்லாதொழிப்பது தொடர்பான செயன்முறை பயிற்சியும் வயல் நிலப்பகுதியில் வைத்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டது

இந்நிகழ்வில் உதவி விவசாய பணிப்பாளர் சி.ஆர்.டி. துஷ்யந்தி. விவசாய போதனாசிரியர் ஏ.எச்.எம். அஸ்கர். தொழில்நுட்ப உதவியாளர் கே.செந்தூரன் உட்பட பிரதி விவசாய பணிப்பாளர் பணிமனையின் அதிகாரிகள். விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.