நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு, அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான பதிவுகளை மேற்கொள்ள பொது மக்கள் கடந்த சில நாட்களாக வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் நுவரெலியா பிரதேச செயலகத்தின் பொது மலசல கூடத்திற்கு அருகிலும், மலசல கூடத்தின் கழிவு நீர் தேங்கி நிக்கும் கால்வாய் அருகிலும் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருக்க நேரிடுவதாக தெரிவிக்கின்றனர்.
மலசல கூடத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர், நீண்ட கால்வாய்யில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது
வரிசையில் நிற்பவர்கள் துணிகளை கொண்டு தமது மூக்கை மூடிக்கொண்டு அங்கு நிற்பதையும், அந்த கழிவு நீரை மிதித்துக்கொண்டு நடந்து செல்வதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
கழிவு நீர் கால்வாய் நீண்ட நாட்களாக துார் வாரப்படாமல் காணப்படுகின்றது, இதனால், கழிவு நீர் வெளியேற வழியின்றி கருமை நிறத்தில் தேங்கி நிற்கிறது.
அத்துடன், நுவரெலியாவில் அடிக்கடி பெய்யும் மழை நீரும், கழிவு நீரும் ஒன்றாக கலந்து குறித்த கால்வாய் நடுவே நிரந்தரமாக தேங்கி கிடப்பதால் இந்த பகுதியில் தொடர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலகங்கள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கொரிக்கை விடுக்கின்றனர்.
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள அனைவரும் தமது தகவல்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளதாவும், குறித்த காலப்பகுதிக்குள் தகவல்களைப் புதுப்பிக்கத் தவறும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் எதிர்காலத்தில் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஏராளமான பொது மக்கள் காலை முதல் மாலை வரை நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு ஒரே நேரத்தில் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிய வருகின்றது.
