
நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பாதுகாப்புப் படை பெண்!
பிரபல பொலிவூட் நடிகை கங்கனா ரனாவத்தை பாதுகாப்புப் படை பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
டெல்லி செல்வதற்காக நடிகை கங்கனா ரணாவத் சண்டிகர் விமான நிலையம் வந்தபோது, பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு கங்கனாவை பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார்.
வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களை நடிகை கங்கனா ரனாவத் அண்மையில் விமர்சித்திருந்தார்.
இதனால் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் பாதுகாப்புப் படை பெண் ஒருவர், அறைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கங்கனாவை கன்னத்தில் அறைந்த காவலரான குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கங்கனாவை தாக்கியது குறித்து குல்விந்தர் கவுர், “100 ரூபாய் காசுக்காக விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் கலந்துகொள்கிறார்கள் என்று கங்கனா கூறியிருந்தார். அவரால் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உட்கார முடியுமா? கங்கனா இந்த கருத்தைச் சொல்லும்போது அந்தப் போராட்டத்தில் என் அம்மாவும் போராடிக் கொண்டிருந்தார்” என தெரிவித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பிட்ட ஒரு போராட்டத்தை மேற்கொள்காட்டி அதிலிருக்கும் மூத்த விவசாய பெண்ணை குறிப்பிட்டு நடிகை கங்கனா தனது எக்ஸ் தள பக்கத்தில், “100 ரூபாய்க்காக அவர் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அதனை தனது எக்ஸ் தள பக்கத்திலிருந்து கங்கனா நீக்கிவிட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்