நடனப் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு

-யாழ் நிருபர்-

தேசிய ரீதியில் நடைபெற்ற தேயிலை கொழுந்து கொய்யும் மலையக நடனத்தில் முதலிடம் பெற்ற வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர்களுக்கு மாபெரும் கௌரவிப்பு இன்றையதினம் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டு, தேவாரம் இசைக்கப்பட்டு வரவேற்புரையுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள், தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற நடனம் என்பன இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து குறித்த நடனத்தினை பயிற்றுவித்த நடன ஆசிரியர் திருமதி. சகிலா சுதாகரன், சங்கீத ஆசிரியர் திருமதி. நித்தியா தவக்குமார் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், பங்குபற்றிய மாணவர்களுக்கு கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினாலும் நடன ஆசிரியராலும் நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கல்லூரியின் முதல்வர் திரு. லங்கா பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நடன ஆசிரிய ஆலோசகர் திருமதி. சுபத்திரா கந்தகுமார் , சிறப்பு விருந்தினராக பழைய மாணவன் திரு. அ.சிவானந்தன்   கலந்து சிறப்பித்ததுடன், இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.