தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக ஈரோஸ் அறிவிப்பு!

-வவுனியா நிருபர்-

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி வடகிழக்கில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயற்குழு கூட்டம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே கட்சியின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தென்பகுதி மக்கள் தமக்குரிய தலைமையினை தெரிவுசெய்துள்ளனர், கடந்த காலங்களில் தமிழ்த்தேசியம் என்ற நிலைமையினை தக்கவைத்து தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டியிருந்தமையால் நாம் அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை, இன்று தமிழ்த்தேசியம் சீரழிந்து சிதறடிக்கப்பட்டு மக்கள் கலங்கிய குளத்தில் நீந்துகின்ற மீன்களாக உள்ளனர்.

பல்வேறு சக்திகளாலும் எமது மக்களின் வாக்குகள் கவரப்படுகின்ற பரிதாப நிலை இன்று ஏற்ப்பட்டுள்ளது, எனவே மக்கள் அனைவரும் ஒரே அணியாக திரண்டு ஈரோஸ் அமைப்பினூடாக போட்டியிடும் பிரதிநிதிகளை தெரிவுசெய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

குறித்த ஊடக சந்திப்பில் கட்சியின் செயலாளர் எ.இ.ராசநாயகம் மற்றும் தலைவர் துஸ்யந்தன், கட்சியின் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.