துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை வழமைக்கு கொண்டு வர இலங்கை மின்சார சபை நடவடிக்கை

சீரற்ற வானிலையால் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகளை வெகு விரைவில் மீள இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

சுமார் 39 இலட்சம் பயனாளர்களுக்கான மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் நொயெல் பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.

எனினும், 24 மணித்தியால தொடர் செயற்பாட்டின் ஊடாக சுமார் 88 வீதமான மின் விநியோகம் வழமைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

16,771 மின்பிறப்பாக்கிகள் பாதிப்படைந்த நிலையில், அவற்றில் பெரும்பாலானவை முழுமையாக வெள்ள நீரில் மூழ்கடிக்கப்பட்டதாகவும் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மின்பிறப்பாக்கிகளில் 14,599 மின்பிறப்பாக்கிகளின் செயற்பாடுகள் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது .

இதேநேரம் மின் இணைப்புகளின் திருத்தப் பணிகளில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர், ஹெட்டிபொல பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் நொயெல் பிரியந்த தெரிவித்துள்ளார்.