திருக்கோவில் மாணவன் உயிரிழந்த சம்பவம் : அம்பாறையில் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு

 

-அம்பாறை நிருபர்-

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப் பகிஸ்கரிப்பிற்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தின் சில வைத்தியசாலைகள் ஆதரவு தெரிவித்து பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது காரைதீவு ஒலுவில் அட்டப்பளம் நிந்தவூர் உள்ளிட்ட வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்களே இவ்வாறு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அங்கு பணியாற்றிய வைத்தியர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கடமையை உரிய முறையில் மேற்கொள்ள பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் இவ்வாறு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை 11 ஆம் திகதி திருக்கோவில் மெதடிஸ்த மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி இடம்பெற்றது.

அதில் மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த ஜெயக்குமார் விதுர்ஜன் (16 வயது) என்ற மாணவன் மயங்கி வீழ்ந்தார்.

மயங்கி வீழ்ந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச் சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் கவனயீனமாக குறித்த மாணவன் உயிரிழந்தார் என குற்றம்சாட்டு தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதில் கட்டிடத்தின் பல யன்னல் கண்ணாடிகள் உடைந்து தேசமடைந்ததுடன்இ வைத்தியசாலை பெயர் பலகையை உடைத்து சேதப்படுத்தியதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து பொலிஸார் விசேடஅதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கை இடம்பெற்ற நிலையில் ஆர்ப்பாட்டகாரர்கள் 5 மணித்தியால ஆர்ப்பாட்டத்தையடுத்து அங்கிருந்து வெளியேறினர்.

அதனை தொடர்ந்து உயிரிழந்த மாணவன் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசேதனையில் கண்டறியப்பட்டதுடன், அவரின் உடல் கூறுகள் அரசபகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன் சடலம் கடந்த 12 ம் திகதி உறவினரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் தமக்கு பாதுகாப்பு இல்லை எனவும், அரச சொத்தான வைத்தியசாலை கட்டிடத்திற்கு சேதம் விளைவித்தவர்களை கைது செய்யுமாறு கோரி கடந்த 10 நாட்களுக்கு மேல் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் வைத்தியசாலை செயற்பாடுகள் அனைத்தும் செயழிழந்துள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த 50 பேரை இனங்கண்டு கொண்ட பொலிஸார் பெண் ஒருவர் உட்பட 6 பேரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 4 ஆம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நேற்று திங்கட்கிழமை கொழும்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் (GMOA) திருக்கோவில் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினருக்கும் இடையில் ஒரு கலந்துரையாடலும் நடைபெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.