தாழமுக்கமாக மாறும் குறைந்த அழுத்தம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை
இலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது, அடுத்த 30 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மற்றும் காற்று நிலைமை அடுத்த சில நாள்களில் (நவம்பர் 25 – 29) மேலும் தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.
கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையான மிகப் பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இதேநேரம் ஏனைய பிரதேசங்களில் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
மீனவர்கள் மற்றும் கடலுக்கு செல்வோர் நாளை (நவம்பர் 26) முதல் மறு அறிவித்தல் வரும் வரை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சீரற்ற வானிலை பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும், அவசர உதவிகளுக்கு பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
