
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு பெளதீக வளம் கோரி ஆர்ப்பாட்டம்
-நானுஓயா நிருபர்-
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு பௌதீக வளங்களை வழங்குமாறு கோரி, அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் ஊழியர்கள் குழுவினர் மற்றும் பொது மக்கள் இணைந்து இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலவாக்கலையில் உள்ள லிந்துலை நகர சபைக்கு சொந்தமான இரண்டு மாடி கட்டிடத்தில் 2020 ஆம் ஆண்டு பிரதேச செயலகம் புதிதாக நிறுவப்பட்டது. மேற்படி பிரதேச செயலகத்தின் கீழ், தலவாக்கலையிலுள்ள லிந்துலை நகர சபைப் பகுதி, திம்புல கிராம சபையிலுள்ள சில பகுதிகள் மற்றும் கொட்டக்கலையிலுள்ள அகரபத்தனை பிரதேச சபைப் பகுதிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது இருந்தும் குறித்த கட்டிடத்தில் குறிப்பிட்ட சில பௌதீக வளங்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றை கொண்டு பொது மக்களுக்கு சேவை வழங்க முடியாது உள்ளதாகவும் இதனால் தாங்கள் பாரிய சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர் கூறுகையில் குறித்த பிரதேச செயலகத்தில் 150 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிவதாகவும், பிரதேச செயலகத்தில் உள்ள இடம் அதற்குப் போதுமானதாக இல்லை ,அதேபோல், பிரதேச செயலகத்தில் பௌதீக வளங்கள் இல்லாததால், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களை நாடி வரும் பொது மக்களுக்கு உரிய சேவைகளை வழங்க முடியவில்லை எனவும் இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் இதற்கு பொறுப்பான அதிகாரிகளுடன் பல முறைகள் கடிதங்கள் வழங்கியும் நேரடியாக சென்றும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
குறித்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய வசனங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தலவாக்கலை பிரதான நகரை சுற்றி நடைபவணியாக முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தலவாக்கலை பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
Beta feature