கிளிநொச்சி வர்த்தக சமூக அபிவிருத்தி சங்கத்தினர், கிளிச்சிபகுதியில் உள்ள வர்த்தக ஸ்தாபன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வர்த்தக சங்கத்தின் தீர்மானத்தை மீறி ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்படும் ஒருசில வர்த்தக நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இது குறித்து வர்த்தக சங்கத்தின் உப தலைவர் கருத்து தெரிவிக்கையில்,
முக்கிய சேவைகளை செய்யும் வர்த்தக ஸ்தாபனங்கள் தவிர்ந்த ஏனை வர்த்தக ஸ்தாபனங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் மூடுமாறு வர்த்தக சங்கத்தினால் யாப்பின் பிரகாரம் தீர்மானம் எடுக்கப்பட்டது.
எமது சங்கத்தின் பகுதிக்கு 636 கடைகள் உள்ளன, அதில் நான்கு கடைகள் மாத்திரம் ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்து வியாபார நடவடிக்கைகளை ஈடுபடுகின்றனர், அத்துடன் அதிகூடிய இலாபம் ஈட்டும் நோக்குடன் பொருட்களை விற்பனை செய்து மக்களுக்கு இடையூறு விளைவிக்கின்றனர், என தெரிவித்தார்.