செல்வத்தை அள்ளித் தரும் அட்சய திருதியை

இன்றைய நாளில் தங்கம் வாங்கி சேர்ப்பதில் உலக அளவில் மக்களிடம் ஆர்வம் அதிகமாக உள்ளது. நடுத்தர மக்களை பொறுத்தவரை, தங்கம் வாங்குவது என்பது மிக முக்கியமான அதே சமயம் விலை உயர்ந்த சேமிப்பாகவும், முதலீடாகவும் கருதப்படுகிறது.

உலகில் பிரபலமாகக் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றாக மாறி உள்ளது அட்சய திருதியை திருநாள். ஒரு காலத்தில் இப்படி ஒரு நாள் இருப்பதே பலருக்கும் தெரியாது. சமீப ஆண்டுகளில் பிரபலமான இந்த நாள் மங்களகரமான நாளாகவும், மங்கள பொருட்கள் வாங்குவதற்கு ஏற்ற நாளாகவும் கருதப்படுகிறது.

அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்கினால் தொடர்ந்து வீட்டில் செல்வம் வளம் பெரும், நிறைய தங்கம் வாங்கும் யோகம் கிடைத்து தங்கம் சேரும் என்பது நம்பிக்கை. வசதி இல்லாதவர்கள் மகாலட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படும் உப்பு, மல்லிகை போன்ற வெள்ளை நிறத்தால் ஆன மங்கள பொருட்களை வாங்கி வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இது சித்திரை மாதம் அல்லது வைசாக மாதத்தின் சுக்ல பட்சம் 14 வது நாளில் அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால் அள்ள அள்ள குறையாத, தொடர கூடியது என்று பொருள். பதினைந்து திதிகளில் மூன்றாவதாக வரும் திதி திரிதியை.

இந்த வருடம் அட்சய திரிதியை ஏப்ரல் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஆனால் ஏப்ரல் 22ம் திகதி சனிக்கிழமை காலை 09.18 மணிக்கே திரிதியை திதி துவங்கி விடுகிறது. ஏப்ரல் 23ம் திகதி காலை 09.27 வரை மட்டுமே திரிதியை திதி உள்ளது. ஏப்ரல் 23 ம் திகதியே சூரிய உதய காலத்தில் திரிதியை திதி உள்ளதால் அன்றைய தினமே அட்சய திரிதியை நாளாக சொல்லப்படுகிறது. தங்கம் வாங்குவதற்கான நல்ல நேரமாக ஏப்ரல் 22 ம் காலை 07.49 முதல் ஏப்ரல் 23 ம் தேதி காலை 07.47 வரை சொல்லப்படுகிறது.

அட்சய திரிதியை நாள் பல ஆன்மிக சிறப்புக்களைக் கொண்ட நாளாகும். இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை வாங்குவது மட்டுமல்லாது, இல்லாதவர்களுக்கும், ஏழைகளுக்கும் தானமாக வழங்க வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் எல்லோருக்கும் அதற்கு வசதி கிடையாது. அதனால் இந்த நாளில் அரிசி, கோதுமை, பானகம், நீர்மோர், அன்னம் (சாதம்) தானம் செய்யலாம். எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு தயிர் சாதம் கூட இந்த நாளில் தானம் செய்யலாம்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்