சாதனை படைத்த மாணவி கௌரவிப்பு

-கல்முனை நிருபர்-

அண்மையில் வெளியான உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் உயிரியல் பிரிவில் அம்பாறை மாவட்ட அளவில் எட்டாம் இடத்தை தக்கவைத்து மூன்று ‘A’ தர சித்திகளை பெற்று மருத்துவ துறைக்கு தகுதி பெற்றுள்ள கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி மருதம் கலைக்கூடல் மன்ற உறுப்பினர் இனாம் மௌலானா பாத்திமா ஸைரினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை அமைப்பின் ஆலோசகரும், சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய அதிபருமான எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் கல்முனையில் நடைபெற்றது.

சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்ற தலைவர் கலைஞர் அஸ்வான் எஸ்.மௌலானாவின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதம பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிர், அமைப்பின் தவிசாளர் ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரி எம்.எம். இஸ்மாயில், சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலய அதிபர் யூ.எல்.நஸார், கல்முனை மாநகர சபை உறுப்பினர் கவிதாயினி சுஹைல் அஸீஸ், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அறிவிப்பாளர்களான ஏ.ஆர்.எம்.நௌபீல், எஸ்.ஜனூஸ், அமைப்பின் செயலாளர் எஸ்.எம்.சாதிக் முஹம்மட், பிரதித்தலைவர்களான எம்.எச்.ரஜாய், என்.எம்.அலிகான் உட்பட வர்த்தக பிரமுகர்கள், அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

எமது நாட்டில் மிகப்பெரும் தட்டுப்பாடாக இருக்கும் மகப்பேற்று விசேட வைத்தியராக எதிர்காலத்தில் வர வேண்டும் என இங்கு கலந்துகொண்டிருந்த கல்வியலாளர்கள் தமது உரைகளில் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த மாணவி இனாம் மௌலானா பாத்திமா ஷைரீன், இந்தோனேஷியாவில் 2020இல் நடைபெற்ற சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் இலங்கை சார்பில் பங்கு பற்றி தங்க பதக்கம் வென்று, இலங்கைக்கு முதலிடம் பெற்றுக் கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்தவராவர்.

குறித்த இப் போட்டிக்கு எமது நாட்டில் இருந்து இவர் மட்டுமே பங்கு பற்றி இருந்ததுடன், சுமார் 25 நாடுகளை பிரதிநிதிதுவபடுத்தி சுமார் 400 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டமை, குறிப்பிடத்தக்கது.