சர்வதேச ரீதியில் சாதித்த யாழ் இளைஞன்

-யாழ் நிருபர்-

சர்வதேச மற்றும் தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டிகளில் அபார சாதனைகளை நிலைநாட்டியுள்ள, யாழ்ப்பாணம், தென்மராட்சியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தனுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற புசாந்தன், அண்மையில் பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசியரீதியிலான பளுதூக்கல் போட்டியில் கலந்துகொண்டு, மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

120 கிலோவிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்ட இவர், ஸ்குவட் (squat) பிரிவில் 330 கிலோகிராமையும் , பெஞ்பிரஸ் (benchpress) பிரிவில் 175 கிலோகிராமையும், டெட்லிஃப்ட் (deadlift) பிரிவில் 261 கிலோ கிராமையும் தூக்கி வெற்றி பெற்றுள்ளதோடு, குறித்த போட்டியில் மொத்தமாக 766 கிலோ கிராமை தூக்கி புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

இந்நிலையிலேயே, யாழ்ப்பாண மண்ணின் சாதனைமகனான புசாந்தனை, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்