சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு!

-பதுளை நிருபர்-

 

பசறை பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக உள்ள மின்கம்பம் ஒன்றில் பாரிய குளவிகூடு   காணப்படுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி குளவி கூட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,  என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பசறை பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக தூர பிரதேசங்களில் இருந்து வரும் பேருந்துகள் அவ்விடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவது வழக்கம்.

குறித்த மின்கம்பத்திற்கு அருகாமையில் பயணிகளும், பாடசாலை மாணவர்களும் பேருந்தில் ஏறுவதற்கு காத்திருந்த வேளை, நேற்று புதன்கிழமை மாலை மழை பெய்து கொண்டிருந்த நேரம் குறித்த குளவி கூடு கலைந்து குளவிகள் பாடசாலை மாணவர் உட்பட மேலும் இருவரை தாக்கியுள்ளது.

இதனால் பாடசாலை மாணவன் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனவே,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி குறித்த குளவி கூட்டினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.