கொக்குத்தொடுவாயில் இளைஞன் வெட்டிக்கொலை : மோப்பநாய் சகிதம் தீவிர விசாரணை!
கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞர் ஒருவர், இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொக்குத்தொடுவாய் வடக்கினை சேர்ந்த ஜெயராஜ் சுபராஜ் (வயது 21) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திற்கு 300 மீற்றர் முன்பாக, கொக்குத்தொடுவாய் களப்பு கடலில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு தொழிலுக்கு சென்ற குறித்த இளைஞர், இன்று சனிக்கிழமை அதிகாலை தொழில் முடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, சிலர் அவரை பின்தொடர்ந்து துரத்திக்கொண்டு வந்து, கொக்குதாெடுவாய் களப்பு கடலில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் வைத்து கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்ததாக, தெரிய வருகின்றது.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் தொழிலுக்கு சென்ற ஒருவர், குறித்த இளைஞன் வீதியில் வீழ்ந்து கிடப்பதை கண்டிருந்தார்.
அதனைத்தொடர்ந்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, தீவிர விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் சடலத்தை பார்வையிட்டு, மோப்பநாய் சகிதம் சோதனையை மேற்கொள்ளுமாறும், கைவிரல் அடையாளத்தை பரிசோதனை மேற்கொள்ளுமாறும், சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மோப்ப நாய் சகிதம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன், சிறந்த மரதன் ஓட்ட வீரர் என்பதும், கடந்த காலங்களில் மாகாண ரீதியில் வட மாகாணத்தில் பல சாதனைகளை செய்துள்ளார், என்பதும் குறிப்பிடத்தக்கது.