குருக்கள்மடம் மனிதபுதைகுழி என அடையாளப்படுத்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட நீதிபதி தலைமையிலான உயர் அதிகாரிகள்!

குருக்கள்மடம் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது உரிய நபர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தை இன்றையதினம் நீதிபதி ஜே.பீ.ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டத்தரணிகள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர், பொலிசார், காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக அதிகாரிகள், சட்ட வைத்திய நிபுணர்கள், தடயவியல் பொலிசார், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், உள்ளிட்ட பலரும் பார்வையிட்டனர்.

இதன்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் உரிய இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

சம்பவ இடத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களை தோண்டி எடுக்குமாறு ஏற்கனவே களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இன்று நீதிபதி தலைமையிலான உயர் அதிகாரிகள் உரிய இடத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

குருக்கள்மடம் கடற்கரைப் பகுதியை அண்மித்ததாக உள்ள இடம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு பாதுகாப்பு வலயம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது